Wednesday, December 19, 2018

ஒன்று

உயிரின் வகை எண்பத்து நான்கு லட்சம்
அதனில் ஒன்று தான் மனிதப்பிறவியாம்
ஒன்றே பலவாய் காட்சிப் பிழையோ
ஒன்றின் வடிவே இத்தனை வகையோ

நன்றே சொன்ன குருவின் வாக்கு
நாளும் நெஞ்சில் நடனமாட
ஒன்றாய் இருப்பது பலவாய் எப்படி
அடிப்படையின்றி ஆசானும் உரையாரே!

சற்றே கண்கள் அயர்ந்து சோர்ந்தேன்
விரிந்தது ஆங்கோர் அற்புத காட்சி
அதனில் நானும், இன்னும் பலரும்
அங்கும் இங்கும் ஓடித் திரிந்து

தெரிந்தன பேசி, தெரியாதன கற்று
புரிந்தன ஏற்று புரியாதன மறுத்து
எதோ ஊரில் அழகாய் சூழலில்
கண்ணுக்கினிய காட்சிகள் விரித்து

அத்தனையும் இன்பமாய்க் கொண்டு
உறக்கம் கலைந்து விழிகள் விரிக்க
கண்டது நல்லதோர் கனாவோ நானோ
கண்ட எனக்குள் விரிந்த என்னைப்போல்

ஒன்றே பலவாய் காட்சி பிழையும்
ஆகத்தகுமே குருவின் கூற்றுக்கு
பொருள் விளங்கிட ஆனந்த தாண்டவம் ஆடி
ஆடி நின்றேன் ஒன்றென என்னை உணர்ந்ததனாலே!!!!!!

..... கண்மணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home