Sunday, December 30, 2018

த்யானம்

த்யானம் என்றால் என்ன என்றொரு விவாதம் ஒரு பக்‌ஷம் மனமற்ற நிலையே என்றது இன்னொன்று மனம் இறந்த நிலை என்றது மற்றொன்று மனம் மறத்த நிலை என்றது

அவரவர்க்கு அவரவர் சித்தாந்த்தங்கள் மனம் உயிர் வாழ ஒரு கருவி மனத்தில் உயிர் வைத்தல் இடர்

மனம் வாசனயில் எழும் விருப்பங்களுக்கு எண்ண வடிவம் தரும் கருவி

கருவி இறப்பதும், மறப்பதும், அற்றுப்போவதும் கருவி உடையவனை என் செய்யும்???

எது உனது என்று த்யானம் செய்ய பழகியதால் குழப்பம் எது நான் என்று த்யானம் செய்வது தெளிவு கருவி இயக்குவோன் கைபக்குவம் இயக்குவோன் யார்?? இதுவே த்யானம்!!!!

பிறப்பு சூல் தந்த தாய்க்கு என் முதல் வணக்கம் தாயே, நீ இல்லையேல் இந்தப் பிறவியும் இல்லை பிறவாமை என்ற தெளிவும் இல்லை பிறந்ததனால் தானே பிறக்காததை அறிந்தேன்?!

கன்றின் பசியறிந்து சுரக்கும் தாய் மடிபோல் எந்தன் பசியறிந்து புகட்டினார் என் ஆசான்.

எப்படிச் சொல்வேன் என் விடுதலையை?? வரவில்லை என்றதனால் போக்கும் இல்லை என்றானதன்றோ??

அங்கும் முழுமை, இங்கும் முழுமை முழுமையிலிருந்து தோன்றியதனைத்தும் முழுமை முழுமை முதல், முழுமை கடை முழுமை மட்டுமே எங்கெங்கும் என்றானதால் விட்டு விடுதலையானேன்!!!!

குரு ஸ்துதி அஞ்ஞானத் திரையகற்றி, என்னுள்ளே ஒளியேற்றி பிறப்பும் இறப்பும் இல்லா புண்ணியனாய் என்னை எனக்கறிவித்த வேதபுரி விளங்கி நிற்கும் வேந்தே போற்றி

மாயாப் ப்ரபஞ்சத்தில் மயங்கியே அனாதி காலமாய் வீணே பிறவி கழித்திருந்தேன், தானே கொண்ட தயையாலே எனை ஏற்ற என் குருவே, வேதபுரி விளங்கி நிற்கும் வேந்தே போற்றி

மறையறியேன், மறையறியும் முறையுமறியேன், திரையறியேன் திரைக்குள் ஒளிர்ந்த சுடரரியேன் என் இதயக்குகையில் இருட்டகற்ற இசைந்த தாயே, வேதபுரி விளங்கி நிற்கும் வேந்தே போற்றி

கன்றின் பசியறிந்த தாய் போலே எந்தன் பசியறிந்து பரிந்தே புகட்டிடுவாய் ஒன்றே பொருளென்று ஓராயிரம் யுக்தியுடன் நன்றே விளங்க வைத்த ஞான பிதா, வேதபுரி விளங்கி நிற்கும் வேந்தே போற்றி

அனுபவங்கள் அனைத்தும் மாயை பிறவி மாயை, பிறந்தபின் பார்க்கும் பிறவெல்லாமும் மாயை மாறாத சத்யம் எதுவென்று விளங்க வைக்க ஸ்ருதியுக்த்தி அனுபவங்கள் பரிந்தேயுரைத்த வேதபுரி விளங்கி நிற்கும் வேந்தே போற்றி

ஒன்றே உளது அது நீயேயென்று ஓங்கி உரைத்த உத்தம குருவே நன்றே தெளிந்தென் சிந்தையுள் விளங்கி ஒங்காரமாய் நிற்கும் ஐயனே, வேதபுரி விளங்கி நிற்கும் வேந்தே போற்றி

Thursday, December 20, 2018

பிறப்பின் பயனென்ன
பிறவாமை ஒன்று தானே?

துறப்பின் பயனென்ன
துறந்தமை தெரியாதிருப்பது தானே?

கறந்த பாலின் நீர்மை போல்
நீர்த்துப் போகும் வாழ்வினிலே
முதலாய் இருந்ததெல்லாம்
முடியாமல் போனபின்னே
முடியை மழித்தல் மட்டும்
முற்றும் துறத்தல் ஆகிடுமோ??

அகம் துறக்க இயலாது
புறம் துறக்க முயல்வதனால்
அறம் துறந்த நிலை வந்து
சிரம் தாழ்ந்து போய்விடுமே!!!

எல்லாம் இருக்க ஏதும் வேண்டாது
எல்லாம் முடிய ஏதும் முயலாது
நானுக்கும் எனக்கும் மதிப்புகள் அழித்து
எல்லாம் நானே என்னுள் அனைத்துமே

என்றே உணர்ந்து
துறக்கும் துறப்பே
துறப்பில் சிறந்ததென்று
உணர்தினான் ஆசானே!!!!

Wednesday, December 19, 2018

ஒன்று

உயிரின் வகை எண்பத்து நான்கு லட்சம்
அதனில் ஒன்று தான் மனிதப்பிறவியாம்
ஒன்றே பலவாய் காட்சிப் பிழையோ
ஒன்றின் வடிவே இத்தனை வகையோ

நன்றே சொன்ன குருவின் வாக்கு
நாளும் நெஞ்சில் நடனமாட
ஒன்றாய் இருப்பது பலவாய் எப்படி
அடிப்படையின்றி ஆசானும் உரையாரே!

சற்றே கண்கள் அயர்ந்து சோர்ந்தேன்
விரிந்தது ஆங்கோர் அற்புத காட்சி
அதனில் நானும், இன்னும் பலரும்
அங்கும் இங்கும் ஓடித் திரிந்து

தெரிந்தன பேசி, தெரியாதன கற்று
புரிந்தன ஏற்று புரியாதன மறுத்து
எதோ ஊரில் அழகாய் சூழலில்
கண்ணுக்கினிய காட்சிகள் விரித்து

அத்தனையும் இன்பமாய்க் கொண்டு
உறக்கம் கலைந்து விழிகள் விரிக்க
கண்டது நல்லதோர் கனாவோ நானோ
கண்ட எனக்குள் விரிந்த என்னைப்போல்

ஒன்றே பலவாய் காட்சி பிழையும்
ஆகத்தகுமே குருவின் கூற்றுக்கு
பொருள் விளங்கிட ஆனந்த தாண்டவம் ஆடி
ஆடி நின்றேன் ஒன்றென என்னை உணர்ந்ததனாலே!!!!!!

..... கண்மணி

Tuesday, December 18, 2018

இன்று

இன்று

இன்று மட்டுமே நிஜம்

நேற்று என்பது போன கணக்கு
நாளை என்பது இன்றின் கனவு
விழித்து எழுந்த பின்
கனவின் இன்மை போல்
நேற்றும் நாளையும் இல்லாமல் போகுமே!!

இந்த நொடியில் வாழ்க்கை வாழு
கடந்த நொடியின் அனுபவப் படிப்பில்
அடுத்த நொடியை குழந்தை போல் எதிர்கொள்
என்றும் மகிழ்ச்சி உனதேயாகுமே!!!

தண்ணீர் சேரும் இடத்தை மேகம் அறியாது
தென்றல் அடையும் மன்றம் காற்று அறியாது
வித்து முளைவிடும் பூமியை மரம் அறியாது
உனக்கு மட்டும் தான் அடுத்த நொடி மிக்கியம்

காலம் முக்கியம் காரியம் யாவினுக்கும்
நிகழ் ஒன்றே உன் கையில்
புகழும் பெயரும் நிகழினாலன்றி
நினைவுகளால் அன்றே!!!